சிவகாசி அருகே பாட்டாசு ஆலையில் வெடி விபத்து – 4 பேர் படுகாயம்!

 

சிவகாசி அருகே பாட்டாசு ஆலையில் வெடி விபத்து – 4 பேர் படுகாயம்!

விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பெண்கள் உள்பட 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த முதலிப்பட்டி பகுதியில், தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பிற்பகல் தொழிலாளர்கள் பட்டாசு மூலப் பொருட்களை கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு திடீரென விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை இடிந்து தரை மட்டமானது.

சிவகாசி அருகே பாட்டாசு ஆலையில் வெடி விபத்து – 4 பேர் படுகாயம்!

இந்த விபத்தில், பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். பின்னர், 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சிவகாசி மற்றும் விருதுநகரில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள், ஆலையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். வெடி விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக விபத்தில் காயமடைந்தவர்கள் சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.