நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்கா, தம்பி பலி!
நெல்லை
நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது ஓசூரை சேர்ந்த அக்கா, தம்பி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓசூர் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் தௌலத் பாஷா மனைவி ஹாகின் (31). இவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது 7 வயது மகனை, நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வெள்ளங்குளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வந்தார். ஹாகினுக்கு உதவியாக அவரது தம்பி சார்யா அகமது (25), தங்கை ரேஷ்மா (26) ஆகியோர் தங்கி இருந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனையில் உடன் தங்கி இருந்தவர்களுடன், ஹாகின் குடும்பத்தினர் திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். ஆற்றில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக ரேஷ்மா நீரில் மூழ்கினார். யஅப்போது, அவரை காப்பாற்ற முயன்ற சார்யா அகமதுவும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதனை அடுத்து, அந்த பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி தேடியபோது ரேஷ்மா உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சார்யா அகமதுவை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த சேரன்மாதேவி தீயணைப்பு வீரர்கள், மாயமான சார்யா அகமதுவை தேடினர். ஆனால், இருட்டாகியதால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.