கொரோனா வந்தது கூட தெரியாத அளவுக்கு பாடாய் படுத்தும் சில அறிகுறிகள்!

 

கொரோனா வந்தது கூட தெரியாத அளவுக்கு பாடாய் படுத்தும் சில அறிகுறிகள்!

கொரோனா வைரஸ் தொற்று என்றாலே காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் தான் அறிகுறி என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதைத் தாண்டியும் பல அறிகுறிகளை கொரோனா வெளிப்படுத்தும். காய்ச்சல், தொண்டை வலி இல்லாததால் நமக்கு அது கொரோனா பாதிப்பு என்று தெரியாது. இதன் காரணமாக வெளியே செல்வதன் மூலம் கொரோனா மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கொரோனா வந்தது கூட தெரியாத அளவுக்கு பாடாய் படுத்தும் சில அறிகுறிகள்!

ஏன் இப்படி ஏற்படுகிறது என்ற கேள்வி எழலாம். இதற்கு அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருக்கலாம், அவர்கள் உடலில் ஆன்டி பாடி உருவாகி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் வைரஸ் துடிப்புடன் இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கொரோனா தொற்றின் போது ஏற்படும் பொதுவான அறிகுறிகளைப் போல இல்லாமல் வெளிப்படும் மற்ற அறிகுறிகள் என்ன என்று பார்ப்போம்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வலியும் அதன் காரணமாக இருமல் பிரச்னையும் ஏற்படும். ஆனால், சிலருக்கு சாதாரண இருமல், புகைப்பிடிப்பவர்களுக்கு வரக்கூடிய வறட்டு இருமல் போல இருக்கும். அதனால் இது கொரோனா என்று அவர்களால் அறிந்துகொள்ள முடிவது இல்லை.

சிலருக்கு கண்கள் சிவந்து போய்விடும். இது கொரோனாவின் இரண்டாம் நிலை அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு காய்ச்சல் போன்ற வேறு எந்த அறிகுறிகளும் இருக்காது. இதனால் தூக்கமின்மை போன்ற பிரச்னையால் கண் சிவந்து போய் உள்ளது என்று கருதி அலட்சியமாக இருந்துவிடுவார்கள்.

சிலருக்கு திடீரென்று அதிகமாக முடி உதிர்வு பிரச்னை ஏற்படலாம். எதனால் முடி உதிர்வு அதிகமானது என்று குழம்பிப்போய்விடுவார்கள். திடீரென்று அதீதமாக முடி உதிர்வதும் கூட கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த பலருக்கு சில மாதங்கள் வரை முடி உதிர்வு அதிகமாக இருப்பதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கன் ஜேர்னல் ஆஃப் கேஸ்ட்ரோஎன்ட்ராலஜியில் வெளியான ஆய்வில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேருக்கு வயிறு தொடர்பான பிரச்னை இருந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். செரிமானக் குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் இருந்துள்ளது. ஆனால், காய்ச்சல் போன்றவை இல்லை. வயிறு தொடர்பான பிரச்னை நீடித்தால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

நினைவு திறன் குறைபாடு, அடிக்கடி திகைத்துப்போய் செய்வது அறியாது நிற்பது போன்றவையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம். அதீத சோர்வு இருக்கிறது என்றால் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

கொரோனா உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் தாக்குகிறது. எனவே, வழக்கத்துக்கு மாறாக உடல் நலக் குறைபாடு இருந்தால் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது, கொரோனா பரிசோதனை செய்துகொள்வது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றை செய்வது நம்மை மட்டுமின்றி, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.