குஜராத், மும்பையில் கொரோனா வைரஸ் பரவ நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியே காரணம்: சிவசேனா
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,82,143 லிருந்து 1,86,321 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 88, 808 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,269ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபின் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழகம் ஆகிய மாநிலங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மகாராஷ்டிராவில் 65 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மற்றும் டெல்லியில் கடந்த பிப்.24ம் தேதி பிரதமர் மோடி- ட்ரம்ப் கலந்துகொண்ட “நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சிதான், குஜராத், டெல்லி, மஹாராஷ்டிராவில் இந்த அளவிற்கு கொரோனா பரவலுக்குக் காரணம் என சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் தனது வாராந்திர கட்டுரையில் சிவசேனா ஊதுகுழலான ‘சாமானா’வில் கூறினார். அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தைத் திறந்துவைத்த அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்.