கேரளா மாதிரி பழங்கள், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவியுங்க…. பஞ்சாப் அரசை நெருக்கும் எஸ்.ஏ.டி…
கேரளாவை பின்பற்றி, நம் மாநிலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவியுங்க என்று பஞ்சாப் அரசு எஸ்.ஏ.டி. கட்சி வலியுறுத்தியுள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை தொடங்கியுள்ளது. உற்பத்தி விலையை காட்டிலும் 20 சதவீதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும், நவம்பர் 1ம் தேதி முதல் இது நடைமுறைக்கு உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவின் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் மற்ற மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. பஞ்சாபில் காய்கறிகள், பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சிரோன்மணி அகாலி தளம் (எஸ்.ஏ.டி.) அம்மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சிரோன்மணி அகாலி தளத்தின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் கூறியதாவது:
கேரள அரசு அண்மையில் செய்ததை போலவே இந்த திட்டத்தை பஞ்சாப் அரசு மாநில நிறுவன நாளில் தொடங்க வேண்டும். இந்த நடவடிக்கை திடீரென ஏற்படும் விலை வீழ்ச்சிக்கு எதிராக விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கும். தேவைப்பட்டால் இதற்காக அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் ஏற்பாடுகளுடன் அதை பின்பற்ற வேண்டும். இது போன்ற விவசாயிகள் சார்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க எஸ்.ஏ.டி. தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.