சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை: மேலும் பல ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சாத்தான்குள காவலர்கள் 5 பேரை கைது செய்தனர். அவர்களுள் 2 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற 3 காவலர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து அரசு கோரிக்கை விடுத்ததின் பேரில், சிபிஐ போலீசார் வழக்கு விசாரணையை கையிலெடுத்துள்ளனர். இதை தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயிலு முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அம்மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கு தொடர்பாக மேலும் பல ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைத்தார்.