நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடக்கம்

 

நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடக்கம்

பொது முடக்கத்தால் கடந்த 70 நாட்களுக்கு மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சின்னத்திரை தொடர்களில் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மக்கள் பணிக்கு செல்ல இயலாததால், பல தொழில் நிறுவனங்கள் முடங்கின. குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் திரைத்துறையும் முடங்கியதால், அதனை சார்ந்த தொழிலாளர்களின் நிலை கேள்விக் குறியானது. இந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்கு நடிகர்களும், நடிகைகளும் நிதியுதவி அளித்தனர். முக்கியமாக கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் கடந்த 70 நாட்களுக்கு மேலாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடக்கம்

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை மட்டும் 36 சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்பு தொடங்குகிறது என ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார். மொத்தம் 60 தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் 36 தொடர்களுக்கான படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. தமிழக அரசு 10 நாட்களுக்கு முன்பாகவே சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்பை நடத்த அனுமதி வழங்கி இருந்தாலும், பெப்சி தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதற்கான பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றது. அதில் இறுதியாக தொடர்கள் ஒளிபரப்பாகும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி பெப்சி தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாளை முதல் சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்பு தொடங்குகிறது.