“அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம்”
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து விட்டது. தற்போது அந்தந்த துறைகளின் மீதான மானைய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இதில் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சரும் எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி வருகிறார். மகளிருக்கான இலவச பேருந்து பயண விவகாரத்தைக் கையிலெடுத்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “அனைத்துப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே இலவச கட்டணம் என்பதால் வயதான பெண்மணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் பேருந்து அடையாளம் தெரியாமல் ஏறுகின்றனர். அது கட்டண பேருந்து என்று நடத்துநர் பாதியிலோ அல்லது ஆரம்பத்திலோ கீழே இறக்கிவிடுகிறார். இதனால் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஆகவே முதலமைச்சர் அனைத்து பேருந்துகளிலும் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக செல்லூர் ராஜூ, மதுரையில் பென்னிகுக் நினைவிடத்தை இடித்து கலைஞர் நூலகம் கட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் குறுக்கிட்டு, “பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம் கட்டப்படுவதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்; அதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், அதனை மாற்ற அரசு தயாராக இருக்கிறது. தவறாக சொல்லக்கூடாது” என்றார்.