ஆம்பூர் அருகே பாலாற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி!

 

ஆம்பூர் அருகே பாலாற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி!

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே பாலாற்றில் குளித்த 6ஆம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கன்னடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். கூலி தொழிலாளி. இவரது 11 வயது மகன் சரண். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் திறக்காததால் சிறுவன் சரண் வீட்டில் இருந்து வந்தான். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் விண்ணமங்கலம் ஏரி நிரம்பி வழிந்துள்ளது.

ஆம்பூர் அருகே பாலாற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி!

இதனால் நேற்று நண்பர்களுடன் ஏரியை பார்க்க சென்ற சிறுவன் சரண், பின்னர் அங்குள்ள பாலாற்றில் இறங்கி குளித்துள்ளார். ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக சரண் ஆழமான பகுதியில் சிக்கி மூழ்கினார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி தேடியபோது, சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய போலீசார், சிறுவன் சரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளத்தை பார்க்க சென்ற சிறுவன் பாலாற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.