குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி – உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு!
திருவாரூர்
திருவாரூர் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கலைச்செல்வன் (13). இவர் அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று கலைச்செல்வன், நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள தட்டான்குளத்திற்கு குளிக்க சென்றார். குளத்தில் குளித்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிய கலைச்செல்வன் நீரில் மூழ்கி மாயமாகினார்.
இதனை கண்ட, அந்த பகுதி இளைஞர்கள் குளத்தில் இறங்கி தேடிய நிலையில், சுமார் 40 நிமிடத்திற்கு பின் மயங்கிய நிலையில் கலைச்செல்வனை மீட்டனர். தொடர்ந்து, சிறுவனை குடவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் இல்லாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவர் சிகிச்சை அளிக்காததால் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் குடவாசல் வட்டாட்சியர் ராஜன்பாபு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கலைந்து சென்றனர். தொடர்ந்து, சிறுவன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய குடவாசல் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.