எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடம் : இயக்குநர் பாரதிராஜா வருகை!
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு, இயக்குநர் பாரதிராஜா வருகை தந்துள்ளார்.
பாடகர் எஸ்பிபி கடந்த ஆகஸ்ட் 5 ஆம் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து எக்மோ கருவி மற்றும் வெண்டிலேட்டர் கருவிகள் உதவிகளுடன் சிகிச்சைபெற்று வந்தார். இதை தொடர்ந்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அவரது ரசிகர்கள் உற்சாகத்திலிருந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு எஸ்பிபி மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் வந்துள்ளனர்.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா வந்துள்ளார். எஸ்பிபி உடல்நிலை குறித்துக் கேட்க திரைப்பிரபலங்கள் பலரும் வருவார்கள் என்று கூறப்படுவதால் அங்குக் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.