சத்யராஜ் மகளின் ’மகிழ்மதி’ சாம்ராஜ்யம்!
கட்டப்பா என்ற கேரக்டரில் மகிழ்மதி தேசத்தின் சேனாதிபதியாக பாகுபலி படத்தில் நடித்து அசத்தினார் சத்யராஜ். மகிழ்மதி என்ற பெயரிலேயே சத்யராஜ் மகள் திவ்யா, இயக்கம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில் இருந்த அவந்தி நாட்டின் பண்டைய நகரம்தான் மகிழ்மதி என்று கூறப்படுகிறது. அனுப நாட்டின் தலைநகராக மகிழ்மதி நகரம் இருந்ததாகக் கருதப்படுகிறது. பாகுபலி படத்தினால் எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது மகிழ்மதி.
ஆனால், திவ்யாவோ, பாகுபலியையும் தன் இயக்கத்தையும் சம்பந்தப்படுத்தவே இல்லை. ’’என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது, ‘மகிழ்மதி’ என்ற பெயர் நினைவுக்கு வந்தது. என் அம்மா பெயர் மகேஸ்வரியின் முதல் பாதியை என் இயக்கத்தின் பெயரில் இணைக்கவேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. அதற்கு தகுந்தார் போல் இந்த பெயர் இருந்ததால் அதையே என் இயக்கத்திற்கு வைத்துவிட்டேன்’’என்கிறார்.
ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா, மருத்துவ உலகில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். அக்ஷய பாத்திராவின் விளம்பரத் தூதுவர் ஆன இவர், தொடர்ந்து சமூக களத்தில் செயல்பட்டு வந்த நிலையில், ’’தேசத்தின் வளர்ச்சிக்கு தடையாக பல பிரச்சனைகள் இருக்கிறது. அதை வெளி்யில் இருந்து பேசிக்கொண்டே இருக்காமல், அதை சரி செய்ய நேரடி அரசியல்தான் சரியானது’’ என்று முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார். அதனால் அவர் அந்த கட்சியில் சேருகிறார் இந்த கட்சியில் சேருகிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருந்தன.
இச்சூழலில், ‘மகிழ்மதி இயக்கம்’ தொடங்கியிருக்கும் அவர், ‘’இந்த இயக்கம் அரசியல் கட்சியோ, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது. இயக்கம்தான்’’என்கிறார்.
மேலும், உணவும் ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் இல்லை. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கொரோனா போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை. அதனால், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம்தான் மகிழ்மதி இயக்கம்’’என்று இயக்கம் தொடங்கியதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்.
இயக்கத்தை தொடங்கி, கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தரமான உணவும் வழங்கி வருகிறார் திவ்யாசத்யராஜ்.