சாத்தான்குளம் சம்பவமும் சட்டமன்ற தேர்தலும் – திமுக கோஷ்டிபூசலை சாதமாக்கும் அதிமுக

 

சாத்தான்குளம் சம்பவமும் சட்டமன்ற தேர்தலும் – திமுக கோஷ்டிபூசலை சாதமாக்கும் அதிமுக

சாத்தான்குளம் சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி முதலில் பென்னிக்ஸ் இறந்தார். மறுநாள் ஜெயராஜ் உயிரிழந்தார். அடுத்தடுத்து தந்தை, மகன் இறந்த சம்பவத்துக்கு சாத்தான்குளம் போலீசார்தான் காரணம் எனக்கூறினர். அதைக் கண்டித்து வியாபாரிகள் தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்தனர். காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை கொரோனா காலக்கட்டத்திலும் போராட்டத்தில் குதித்தனர்.

சாத்தான்குளம் சம்பவமும் சட்டமன்ற தேர்தலும் – திமுக கோஷ்டிபூசலை சாதமாக்கும் அதிமுக

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திலும் அரசியல் சதுரங்க வேட்டை மறைமுகமாக நடந்துள்ளது. அதை சில சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. சாத்தான்குளத்தில் நடந்த சோக சம்பவத்திலும் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் என இருவரின் ஆதரவாளர்களுக்கிடையே கோஷ்டி பூசல் தொடங்கியுள்ளதாக உடன்பிறப்புகள் முனுமுனுக்கத் தொடங்கியுள்ளனர். சாத்தான்குளம் சம்பவத்தில் தூத்துக்குடி எம்.பி. என்ற முறையிலும் தி.மு.க.வின் மகளிரணி செயலாளர் என்ற அடிப்படையிலும் தி.மு.கவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகள் என்ற அடையாளத்தோடு கனிமொழி சம்பவ இடத்துக்கு வந்தார். ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்களைக் கூறினார்.

கனிமொழி எம்.பி vs சசிகலா புஷ்பா

ஆளுங்கட்சியையும் தமிழக காவல்துறையையும் கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார். பின்னர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதியுதவி 25 லட்சம் ரூபாயையும் ஜெயராஜ் குடும்பத்தினரிடம் கொடுத்தார். அப்போது செல்போனில் தொடர்பு கொண்ட மு.க.ஸ்டாலின் ஜெயராஜின் மனைவியிடம் ஆறுதலை தெரிவித்தார். இதுவரை தி.மு.கவினர் கனிமொழி சிறப்பாக ஸ்கோர் செய்து விட்டார் என்றே கருதினர். சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி எட்டயபுரத்தில் நடந்த காவல்துறையினரால் தாக்கப்பட்ட மனஉளைச்சலில் தற்கொலை செய்தவரின் குடும்பத்தினரையும் கனிமொழி சந்தித்தார்.

சாத்தான்குளம் சம்பவமும் சட்டமன்ற தேர்தலும் – திமுக கோஷ்டிபூசலை சாதமாக்கும் அதிமுக
சாத்தான்குளத்தில் திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி அருகிலேயே இருந்தார். தூத்துக்குடி எட்டயபுரத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை கனிமொழி அருகிலேயே இருந்தார். சாத்தான்குளம் சம்பவத்தின்போது ஒவ்வொரு அரசியல் கட்சி நிர்வாகிகளும் தலைமையிடம் நல்ல பெயரை வாங்க முனைப்பு காட்டினர். ஜெயலலிதா மீதே பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டி பேசிய முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, தற்போது பா.ஜ.க.வில் உள்ளார். முன்னாள் எம்.பியான சசிகலா புஷ்பாவும் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர். திசையன்விளை ஆணைக்குடியைச் சேர்ந்த அவரும் சமுதாய ரீதியிலும் கட்சி பலத்திலும் ஸ்கோர் செய்ய சாத்தான்குளம் சம்பவத்துக்கு பா.ஜ.க. தலைமை அனுப்பி வைத்தது. அனால் அவரைவிட கனிமொழி எம்.பி சிறப்பாக செயல்பட்டார். இது சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்களுக்கு வருத்தம்.

போட்டி போட்டு நிதியுதவி

ஆளுங்கட்சியினர், காவல்துறையினர் மீதான அதிருப்தியால் சாத்தான்குளம் பொதுமக்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதிகேட்டு ஒரணியில் திரண்டனர். நிலைமை விஸ்வரூமாவதை உளவுதுறை மூலம் தெரிந்துக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அரசு தரப்பில் நிதியுதவி மற்றும் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்தினருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதற்கு போட்டியாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டானின் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி என அறிவிப்பு வெளியிட்டு ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்தார். அதனால் அங்கு அ.தி.மு.க. தலைமையும் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்திருந்தது.

சாத்தான்குளம் சம்பவமும் சட்டமன்ற தேர்தலும் – திமுக கோஷ்டிபூசலை சாதமாக்கும் அதிமுக

சாத்தான்குளம் சம்பவத்தில் கனிமொழி எம்.பி-க்கு மக்களிடையே நல்ல பெயர் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அவரின் ஆதரவாளர்கள் இருந்தனர். இந்தச் சூழலில்தான் சென்னையிலிருந்து மாநில இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளத்துக்கு கட்சி தலைமையால் அனுப்பி வைக்கப்பட்டார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் வருகைகயை கனிமொழி எம்.பி-யின் ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை. அதனால் தி.மு.கவில் நிலவிய கோஷ்டி பூசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஆளுங்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

சிபிஐ விசாரணை

சாத்தான்குளம் சம்பவத்தில் ஆளுங்கட்சியை எதிர்கட்சியினர் கடுமையாக எழுந்த விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் உளவுத்துறை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு அவசர ரிப்போர்ட்டை அனுப்பியது. எதிர்கட்சியினர் சி.பி.ஐ விசாரணை என்று கேட்பதற்கு முன் நீங்களே சிபிஐ விசாரணை என்ற அறிவிப்பை வெளியிடும்படி தெரிவிக்கப்பட்டது. உடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சிபிஐ விசாரணை என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனால் எதிர்கட்சியினர் கொஞ்சம் ஆடிபோய்விட்டனர். சிபிஐ விசாரணை என்ற அறிவிப்பு வெளியானதும் காவல் நிலையம், சிறைச்சாலை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் வெளியில் வரத்தொடங்கின. இறுதியாக ஜெயராஜை போலீசார் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியில் வந்தது. மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் உள்ள விவரங்களுக்கும் நடந்தச் சம்பவங்களுக்கும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக தகவல் வெளியானது.

சாத்தான்குளம் சம்பவமும் சட்டமன்ற தேர்தலும் – திமுக கோஷ்டிபூசலை சாதமாக்கும் அதிமுக

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்களுக்குப் பதிலாக புதிய காவலர்கள் பணியமர்த்தி தூத்துக்குடி எஸ்.பி உத்தரவிட்டார். சாத்தான்குளம் சம்பவத்தில் தூத்துக்குடி எஸ்.பி-யின் பேட்டியும், தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் உளவுத்துறையினர் அரசுக்கு கொடுத்த ரிப்போர்ட்டுகளால் ஆளுங்கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர். அதனால் விரைவில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சட்டமன்ற தேர்தல்

சாத்தான்குளம் சம்பவத்தில் ஒருபுறம் அரசியலும் மற்றொரு புறத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகளும் ஆளுங்கட்சியினருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த சூழலில் சாத்தான்குளம் சம்பவத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆளுங்கட்சியினரை விமர்சித்துவருகிறது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என பா.ஜ.க மேலிடம் விளக்கம் கேட்டுள்ளது. இன்னும் சில மாத கால ஆட்சி மட்டுமே இருப்பதால் 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான காயை தி.மு.க நகர்த்தி வருகிறது. அதற்கு முட்டுக்கட்டை போட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்துவருகின்றனர்.

சாத்தான்குளம் சம்பவமும் சட்டமன்ற தேர்தலும் – திமுக கோஷ்டிபூசலை சாதமாக்கும் அதிமுக

கொரோனா காலக்கட்டத்திலும் சாத்தான்குளம் சம்பவம் இந்தளவுக்கு பிரளயத்தை ஏற்படுத்தும் என ஆளுங்கட்சியினர் எதிர்பார்க்கவில்லை. தென்மாவட்டங்களை பொறுத்தவரை காங்கிரஸிக்கு கணிசமான ஓட்டு வங்கிகள் உள்ளன. அதை சாத்தான்குளம் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் அ,தி.மு.கவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கொங்கு மண்டலம்தான் அ.தி.மு.கவுக்கு கைகொடுத்தது. அதனால் இந்தத் தேர்தலில் தென்மாவட்ட வாக்கு வங்கியை பலப்படுத்த திட்டமிட்டிருந்த நேரத்தில் சாத்தான்குளம் சம்பவம் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்

எஸ்.செல்வம்