“சமஸ்கிருதம் அறிவை வளர்க்கும்; அடுத்த சந்ததிக்கும் கடத்த வேண்டும்” – பிரதமர் மோடி உரை!
நரேந்திர மோடி முதன் முதலாக பிரதமர் பதவியேற்ற 2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்றும், அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்னும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிவருகிறார். இன்று நிகழ்ச்சியின் 80ஆவது தொடரில் பிரதமர் மோடி பேசினார். நாட்டில் கொரோனா மூன்றாம் அலைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் பிரதமர் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் சமஸ்கிருத மொழி குறித்து புகழ் பாடினார்.
அப்போது பேசிய அவர், “சமஸ்கிருத மொழி இலக்கியங்கள் மிகவும் செழுமையானவை. சமஸ்கிருதம் நம்முடைய மொழி அறிவை வளர்க்கவும், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் உதவுகிறது.ஆன்மிகமும், மனிதாபிமானமும் ததும்பும் சமஸ்கிருத இலக்கியம் யாரையும் தன் வசம் ஈர்க்கக் கூடியது. சமீப காலமாக சமஸ்கிருதம் மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. எனக்குத் தெரிந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ருட்ஜெர் சமஸ்கிருத அறிஞர்.
அவர் அங்குள்ள குழந்தைகளுக்கு சமஸ்கிருதம் பயிற்றுவிக்கிறார். அதேபோல தாய்லாந்தில் டாக்டர் சிராபட் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கிறார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், சிட்னி சமஸ்கிருத பள்ளியில் மாணவர்களுக்கு சம்ஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதேபோல் உள்நாட்டிலும், சமஸ்கிருதம் கற்பிப்பதில் சிறந்து விளங்குவரைத் தெரிந்தால் சமூகவலைதளங்கள் மூலம் அவர்களைப் பிரபலப் படுத்துங்கள். நமது கலாச்சாரத்தை, பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. நாம் கடைப்பிடிக்கும் கலாச்சாரத்தை நம் சந்ததியினருக்குக் கடத்த வேண்டும்” என்றார்.