சென்னை விமான நிலையத்தில், ரூ.79.78 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!
சென்னை
துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திவரப்பட்ட ரூ.79 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை சென்னைக்கு இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த முகமது அனாஸ் என்பவரை சந்தேகத்தின் பேரில் தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது, அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாக்ஸ் மற்றும் பிங்க் நிறத்தினலான பட்டையில் தங்க துண்டுகளை மறைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைடுத்து, அவரிடம் இருந்து சுமார் ரூ.59 லட்சத்து, 18 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 28 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அனாசிடம் விசாரித்ததில், அவர் பயணித்த விமானம் சென்னைக்கு வருவதற்கு முன்பாக சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வந்தது தெரியவந்தது.
இதேபோல், நேற்று லக்னோவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமான பயணிகளை சோதனை செய்தபோது, நைனா முகமது என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் சோதனையிட்டபோது, ஷூ மற்றும் ஆசனவாயில் மறைத்து தங்க பசை கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்து 20 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 446 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்க அதிகாரிகளின் விசாரணையில் அவர் பயணித்த விமானம், துபாயில் இருந்து லக்னோ வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, இவருவரிடமும் இருந்து மொத்தம் ரூ.79 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான 1.72 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக முகமது அனாஸை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.