பர்னிச்சர் நிறுவன மேற்கூரையை உடைத்து, ரூ.7.5 லட்சம் கொள்ளை!
கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே பர்னிச்சர் மொத்த வியாபார நிறுவனத்தின் மேற்கூரையை உடைத்து, 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவசுப்புராஜ். இவர் மார்த்தாண்டம் பகுதியில் பர்னிச்சர் மொத்த வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றிரவு வியாபாரம் முடித்து நிறுவனத்தை பூட்விட்டு வீட்டிற்கு சென்ற சிவசுப்புராஜ், இன்று காலை வழக்கம்போல் கடையை திறந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, விற்பனை பணம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாயமானது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மேல் தளத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு மேற்கூரை உடைக்கப்பட்டு, இருப்பது தெரியவந்தது. அத்துடன், கொள்ளையர்கள் சிசிவிடி கேமராவில் சிக்கிக் கொள்ளாத வகையில், கணினியின் ஹார்டிஸ்கை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, அவர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.