டாஸ்மாக் ஊழியரை தாக்கி, ரூ.6.15 லட்சம் கொள்ளை!
தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி, மது விற்பனை பணம் 6 லட்சத்து 15 ஆயிரத்தை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு. குளத்தூர் அண்ணா நகர் காலனியை சேர்ந்த முருகன் (50) என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை மது விற்பனை பணம் ரூ.6 லட்சத்து 15 ஆயிரத்தை, கீழ வைப்பாறில் உள்ள பொதுத்துறை வங்கியில் செலுத்துவதற்காக முருகன், தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, முருகனை வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள், அவரை தாக்கி விட்டு பணத்தை பறித்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் லேசான காயமடைந்த முருகன், இதுகுறித்து குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.