சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.400 கோடி செலவீடு : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 4,538 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டுமே 83,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் தற்போது 14,923 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் பாதித்து குறைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக மட்டும் ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் கொரோனா பரிசோதனைக்கு ரூ.200 கோடியும், களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க மட்டுமே ரூ.30 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், சென்னையில் 90% மக்கள் மட்டுமே மாஸ்க் அணிவதாகவும் மீதமுள்ள பேர் மாஸ்க் அணிவதில்லை என்றும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.