அரக்கோணத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.3.19 லட்சம் பறிமுதல்!
ராணிப்பேட்டை
அரக்கோணம் அருகே ஐதராபாத்தை சேர்ந்த பெண்ணிடம் உரிய ஆவணமில்லாத 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் உள்ள தக்கோணம் கூட்டுரோட்டில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஐதராபாத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி காரில் சென்ற இந்திரா என்பவரை மறித்து சோதனையிட்டனர்.
இந்த சோதனையில், அவர் காரில் 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது,பட்டுப்புடவை வாங்குவதற்காக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாதது தெரியவந்தது.
இதனை அடுத்து, இந்திராவிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.