“பயணத்தை ரத்து செய்தால் இனி ரூ.100 அபராதம்” : உபேர், ஓலா நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!
ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது.
ஓலா, உபேர் போன்ற வாடகை கால் டாக்சி நிறுவனங்களில் தற்போது ஆட்டோவும் இணைந்து விட்டது. இதனால் செல்போன் இருந்தால் போதும், ஆட்டோஅல்லது காரை புக் செய்து உடனடியாக வாகனத்தில் ஏறி தாங்கள் செல்லும் இடங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் சாதாரணமாக ஆட்டோ ஓட்டும் நபர்கள் பாதிக்கப்பட்டாலும், பேரம் பேசாமல், குறைந்த கட்டணத்தில் செல்ல கூடியது என்பதால் மக்கள் இதையே தேர்வு செய்கிறார்கள்.
இந்நிலையில் மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர்களுக்கான நெறிமுறைகள் 2020ன் வாடகை கார் நிறுவனங்களுக்கு புதிய கட்டுபாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இனி உச்சபட்ச கட்டணத்தின் அளவு, சராசரி கட்டணத்தின் அளவை விட ஒன்றரை மடங்குக்கு மேல் இருத்தல் கூடாது என்றும் 12 மணிநேரத்திற்கு மேல் ஓட்டுநர்கள் பயணத்தை தொடர கூடாது. 10 மணிநேர ஓய்வுக்கு பிறகு தான் ஓட்டுநர்கள் ஆப்பை லாகின் செய்து மீண்டும் பயணத்தை தொடர முடியும். அதேபோல் வரும் கட்டணத்தில் 80% இனி ஓட்டுநர்கள் பெறுவார்கள் என்றும் பயணத்தை ஓட்டுநராகவே ரத்து செய்யும் பட்சத்தில் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.