பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டல்… வசூல் வேட்டை!- வியாபாரிகளை பதறவைத்த ரவுடிகள் சிக்கினர்

 

பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டல்… வசூல் வேட்டை!- வியாபாரிகளை பதறவைத்த ரவுடிகள் சிக்கினர்

பயங்கர ஆயுதங்களுடன் புதுச்சேரியில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த 3 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாலையோரத்தில் உள்ள துணிக் கடைக்கு 3 பேர் வந்தனர். அவர்கள் 750 ரூபாய்க்கு துணிகள் எடுத்துவிட்டு செல்ல முயன்றனர். அப்போது, கடையின் உரிமையாளர், அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். இதன் பின்னர் அந்த கும்பல், கருவடிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கறிகடைக்கு சென்று, அதன் உரிமையாளரிடம் கத்தியை கான்பித்து 500 ரூபாயை பறித்து சென்றுள்ளனர். இவர்களின் தொடர் பணப் பறிப்பு சம்பவம் அங்கிருந்த வியாபாரிகளை கொந்தளிக்க வைத்தது. இது குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வியாபாரிகள் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, பண பறிப்பு கும்பலை பிடிக்க காவல்துறை களமிறங்கியது. கடைகளில் தொடர்ந்து மிரட்டி பணப் பறிப்பில் ஈடுப்பட்டது புதுச்சேரியைச் சேர்ந்த கார்த்தி என்ற மணிவண்ணன், கண்ணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.