பீகார் அரசுக்கு வைரஸ் பற்றி கவலை இல்லை.. தேர்தலுக்கு தயாராவதில்தான் முழு கவனம்.. தேஜஸ்வி யாதவ்
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு ஆட்சி செய்து செய்கிறது. இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கி விட்டன. இந்த சூழ்நிலையில், நிதிஷ் குமார் அரசு, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து கவலைப்படாமல் எதிர்வரும் தேர்தலுக்கு தயாராவதில்தான் கவனம் செலுத்துகிறது என தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரின் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் டிவிட்டரில்: பீகாரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக விகிதத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் பரிசோதனைகள் அல்லது சிகிச்சை குறித்தோ அரசு கவலைப்படவில்லை. அரசு இயந்திரம் முழுவதும் எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளில் பிசியாக உள்ளது.
அரசு இதனை கண்காணிக்கவில்லை என்றால், ஆகஸ்ட்-செப்டம்பருக்குள் நிலவரம் பெரிய அளவில் வெடிக்கும். இவ்வாறு அதில் பதிவு செய்து இருந்தார். நேற்று காலை நிலவரப்படி, பீகாரில் மொத்தம் 12,215 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,997 பேர் குணம் அடைந்துள்ளனர். அதேசமயம் அந்த தொற்று நோய்க்கு 97 பேர் உயிர் இழந்துள்ளனர்.