வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்ல வேண்டாம் – தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
இதில் சிலர் நடந்தே அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து பணி புரிபவர்கள் இங்கேயே சிக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிக்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் உணவுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் நடந்தே அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 55,473 வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தினமும் 10,000 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பயண செலவுகளை தமிழக அரசே ஏற்பதாகவும் தொழிலாளர்கள் நடந்தோ, பிற வாகனங்கள் மூலமாகவோ செல்ல வேண்டாம் என்றும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் வரை தற்போது தங்கியுள்ள முகாம்களில் இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.