முருகனுக்கு உகந்த விரத முறைகளும் அதன் பலன்களும்

 

முருகனுக்கு உகந்த விரத முறைகளும் அதன் பலன்களும்

தமிழ் கடவுளாக போற்றப்படும் அற்புத சக்திவாய்ந்த முருகப்பெருமானின் வழிபாட்டு முறைகளையும் அதனால் ஏற்படும் பலன்களையும் பார்போம்.

முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாக பல்வேறு ஜோதிட நூல்களில் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

வார விரதம்,நட்சத்திர விரதம், திதி விரதம் ஆகிய மூன்று விரதங்களில் ஏதேனும் ஒரு விரதத்தினையாவது தொடர்ச்சியாக கடை பிடிப்பவர்களுக்கு முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்மிடையே நிலவி வரும் நீண்ட கால நம்பிக்கையாகும்.

muruga

வார விரதம் என்பது வார நாட்களில் செவ்வாய்கிழமைகளில் கடைபிடிக்கும் உன்னத விரதமாகும் .

கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.

murugaa

செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும்.

பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும்.மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

 நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் கடைபிடிக்கும் அற்புதமான விரதம் ஆகும். கார்த்திகை நட்சத்திரத்துக்கு முதல்நாள் வரும் பரணி நட்சத்திரத்தன்று இரவில் உணவு உண்ணாமல் இருந்து,

muruga

மறுநாள் அதிகாலையில் நீராடி, அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடவேண்டும். அன்று பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப் பெருமானின் ஸ்தோத்திர நூல்களைப் பாராயணம் செய்யவேண்டும். 

மாலையில் அருகில் உள்ள முருகன் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும் . நாரத மகரிஷி, விநாயகப் பெருமானின் உபதேசப்படி கார்த்திகை விரதத்தை அனுஷ்டித்தே முதன்மைச் சிறப்பைப் பெற்றார்.

கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம்.

muruga

திதி விரதம் என்பது சஷ்டி திதியில் கடைபிடிக்கபடும் மேன்மையான விரத முறையாகும். மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்கவேண்டும். 

அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்கவேண்டும்.

முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்கு திரும்பி விரதத்தை நிறைவு செய்யலாம்.

muruga

தொடர்ந்து ஆறு சஷ்டிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.குழந்தை வரம் தரும் விரதங்களில் முதன்மையான விரதமாக கந்த சஷ்டி விரதமே போற்றப்படுகிறது. அதனால்தான், ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்  என்று கூறுகிறார்கள்.

முருகப் பெருமானுக்கு உரிய இந்த மூன்று விரதங்களையும் முறையாக கடைபிடித்தால் நம் வாழ்வில் சகல செல்வங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கையாகும்.