பெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்!

சின்னமனூர், தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். ராணிமங்கம்மாளின் பாதுகாப்பாளராக இருந்த சின்னமநாயக்கர் என்பவரின் பெயரால் அமையப்பெற்ற சின்னமனுரில் பெருமாள் அருகில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் சிறப்பு வாய்ந்த லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
இங்கு மூலவராக லட்சுமிநாராயணரும்,அம்மனாக ஸ்ரீதேவி, பூதேவியும் அருள் பாலிக்கின்றனர்.
இக்கோயிலின் தல விருட்சம் மகிழமரம்.கோயிலின் புனிததீர்த்தநதியாக கோயிலின் எதிரே சுரபி நதி ஓடிக் கொண்டிருக்கிறது
500 வருடங்கள் பழமை வாய்ந்தது இக்கோயிலின் தல வரலாறு :

முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த பெருமாள் பக்தர்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அமைப்பில் இங்கு சுரபி நதிக்கரையில் சிலை வடித்து கோவில் எழுப்பினர். ஒருசமயம் அந்நியர் படையெடுப்பின் போது, கோவில் சேதமடைந்தது.
பின்பு இப்பகுதியை பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர்.அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் மன்னர் கனவில் தோன்றிய பெருமாள், தனது இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு கோவில் எழுப்பும்படி கூறினார். அதன்பின்பு இங்கு குருவாயூரப்பன் அமைப்பில் சுவாமிக்கு சிலை வடித்த மன்னர், தாயார்களுடன் பிரதிஷ்டை செய்தார்.
குருவாயூரில் சின்னக்கண்ணனாக காட்சி தரும் பெருமாள் இங்கு, தாயார்களுடன் காட்சி தருவது விசேஷமான தரிசனம். பொதுவாக மகாலட்சுமி தாயாருடன் மட்டும் காட்சி தரும் மூர்த்தியே, ‘லட்சுமி நாராயணர்” என்ற பெயரில் அழைக்கப்படுவார். ஆனால், இங்கு சுவாமியின் மார்பிலுள்ள மகாலட்சுமி பிரதான தாயாராக கருதப்படுவதால், சுவாமிக்கு இப்பெயரே அமைந்துவிட்டது.

அபூர்வமாக ஆஞ்நேயர் இங்கு பெருமாளுடன் இருக்கிறார்.அதற்கு இங்குள்ள பக்தர்களால் ஒரு காரணம் சொல்லப் படுகிறது,முன் காலத்தில் இந்த கோவில் மாதவர் பராமரிப்பில் இருந்து என்றும், அவர்கள் தான் அனுமனை பிரதிஷ்டை செய்தனர் என்றும், பிற்காலத்தில் அதை வடக்கு பக்கம் மண்டபம் கட்டி மாற்ற முயற்சித்த போது ஒரு 90 வயது முதியவர் மீது அனுமன் ஆர்பவித்து நீங்கள் யாராடா என்னை பெருமாளிடம் இருந்து பிரிப்பது என்று 10 அடி உயரம் குதித்து தடுத்தவர் என்று கூறுகின்றனர், அதனால் தான் இக்கோயிலில் பெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கின்றார். இன்றும் நீங்கள் அந்த அனுமனை அங்கு காணலாம்

சுரபிநதியின் கிழக்கு கரையில் அமைந்த கோவில் இது. சுவாமி குருவாயூர் அமைப்பில் காட்சி தருவதால், இங்கும் லட்சுமிநாராயணர் கையில் வைத்திருக்கும் சந்தனத்தையே பிரசாதமாகத் தருகிறார்கள். கருவறையில் லட்சுமிநாராயணர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.
சுவாமி இங்கு பிரதானம் என்பதால், பரிவார மூர்த்திகள் இல்லை. சுவாமிக்கு எதிரே கருடாழ்வார் மட்டும் இருக்கிறார். தீராத நோய், வயிற்று வலி நோயால் அவதிப்படுபவர்கள், தங்களுக்குரிய நட்சத்திர நாளில் சுவாமிக்கு துண்டு கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் துண்டை, சுவாமியின் மடியில் கட்டி திருமஞ்சனம் செய்கின்றனர்.
பின்பு ஈரமான துண்டை, பக்தர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். இதை வீட்டில் விரித்து, அதன் மீது படுத்துக்கொண்டால், நோய் நிவர்த்தியாவதாகச் சொல்கிறார்கள். இப்பகுதி விவசாயம் செழிக்க, தங்கள் வயலில் நெல் விதைக்கும் முன்பாக சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜித்துச் செல்கிறார்கள்.
திருமணத்தடை உள்ள பெண்கள் பெருமாளுக்கும், ஆண்கள் ஸ்ரீதேவிக்கும் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, விவசாயம் செழிக்க, முதலாளிகளிடம் விசுவாசம் நிலைத்திருக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். சுவாமிக்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பு, தமிழ்ச்சங்கம் இருந்ததற்கான ஒரே செப்பேடு ஆதாரமான, தற்பொழுது லண்டன் மியுசியத்தில் இருக்கும் புகழ் பெற்ற சின்னமனூர் செப்பேடுகள் இந்தக் கோயிலிலின் கண்டெடுக்கப் பட்டது.
சின்னமனூர் செப்பேடுகள் பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.
இதையும் வாசிக்க: சோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா!? தல புராணம்-7


