அடிக்கடி காணாமல் போன மனைவி; கழுத்தை நெரித்து கொன்ற கணவன்!
சுதா பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்த நிலையில் அவரது கணவர் அசோக் வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் ஹர்விப்பட்டியை சேர்ந்தவர் அசோக். இவர் கடந்த சில ஆண்டுகள் முன்பு சுதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சுதா பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்த நிலையில் அவரது கணவர் அசோக் வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
குடும்பத்தில் சண்டை சச்சரவாக இருந்ததால் தனது ஆர்வத்தை டிக் டாக் மீது செலுத்த தொடங்கிய சுதா காதல் பாடல்களுக்கு டிக் டாக் செய்து அதை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக மாற்றினார். இதனால் அவருக்கு ஆண் நண்பர்களின் நட்பு கிடைத்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமான சுதா,போலீசில் புகார் கொடுத்ததையடுத்து மீண்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி சுதா வீட்டிலிருந்து சென்றுவிட டிக் டாக் சகவாசத்தால் தான் மனைவி இப்படி மாறிவிட்டாள் எண்ணிய அசோக் அவர் மீது கடுமையான கோபத்திலிருந்துள்ளார்.
இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு, இரவு குடித்து விட்டு வந்த அசோக், மனைவி சுதா உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்த அறிந்த சுதாவின் தந்தை ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக்கை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.