ஓஎன்ஜிசி குழாய் உடைந்ததால் சம்பா பயிர்கள் நாசமாகின!
Sep 23, 2020, 09:02 IST1600831953000
சம்பா பயிர்களில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் திருவாரூர் விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கீழஎருக்காட்டூரில் தனசேகரன் என்பவர் நிலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் பொருத்தப்பட்டுள்ள நிலையில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் குழாய் திடீரென உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறியது.
இதனால் அதிர்ச்சியடைந்த தனசேகரன் செய்வதறியாது திகைத்து போய் இருக்க,ஓஎன்ஜிசி குழாயிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி சம்பா பயிர்களை பயிரிட்டு உள்ள அடுத்தடுத்த வயல்களுக்கும் பரவியுள்ளது. தனசேகரன் தன்னுடைய நிலத்தில் சம்பா பயிர் பயிரிட்டு 30 நாட்களே ஆன நிலையில் கச்சா எண்ணெய் கசிவால் மொத்தமும் நாசமாகின.
நீரோடு கலந்து கச்சா எண்ணெய் செல்லும் நிலையில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் இதுவரை வந்து பார்க்கவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.