தனியார் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.1 லட்சம் லஞ்சம்… வணிக வரித்துறை அலுவலர் கைது!
கோவை
கோவையில் தனியார் நிதி நிறுவனத்திற்கு அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற வணிக வரி அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவன உரிமையளர் ஒருவர், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தனது நிறுவனத்தின் 2014-15ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் தணிக்கையாளர் தவறு செய்துவிட்டதாகவும், இதற்காக வணிக வரித்துறையினர் ரூ.15.73 லட்சம் அபாரதம் விதிக்க இருந்ததாகவும், ஆனால் இதனை விதிக்காமல் இருக்க, தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் தர வேண்டுமென வணிக வரித்துறை அலுவலர் விவேகானந்தன் கூறியதாக தெரிவித்திருந்தார்.
மேலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தனது மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழித்துறையினர், ரசாயனம் தடவிய ரூ.1 லட்சம் பணத்தை நிதி நிறுவன உரிமையாளரிடம் கொடுத்து, அதனை வணிக வரி அலுவலரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். அதன் படி நேற்று புகார்தாரர், லஞ்சப்பணத்தை நேரில் சென்று கொடுத்தபோது, வணிக வரி அலுவலர் விவேகானந்தனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.