கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க SRM மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுமதி!
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து மக்களைக் காக்க அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இதற்கான முறையான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை எட்டிவிட்டது. மேலும் 18 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே அவசரக்கால பயன்பாட்டிற்காக சிப்லா மற்றும் ஹெட்டெரோ நிறுவனங்கள் தயாரித்த கோவிஃபோர் (Covifor) மருந்தினை வழங்க இந்திய ஒழுங்குமுறை மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வு மேற்கொள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் எஸ்.ஆர்.எம் உட்பட 13 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.