திரையரங்குகளில் ஐ.பி.எல் போட்டிகள் ஒளிபரப்பா?- அமைச்சர் கடம்பூர் ராஜூ
திரையரங்குகளில் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய தற்போது அனுமதியளிக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “இன்றைக்கு திரையரங்கு திறப்பதற்கு பற்றி முடிவு எடுக்காத நிலையில் ஐபிஎல் ஒளிப்பரப்புவது பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது. சமூக இடைவெளியுடன் உள்ளவற்றுக்கு தான் தளர்வு அளிக்கபட்டுள்ளது. வணிக நிறுவனங்களில் அரைமணி நேரத்திற்கு மேலாக மக்கள் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் திரையரங்குகளில் மக்கள் 3 மணி நேரம் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதி காணொலி காட்சி மூலமாக திரையரங்கு உரிமையாளர்களிடம் திரையரங்கு திறப்பது பற்றி ஆலோசனை நடத்தியது. திரையரங்கு திறப்பது பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கியுள்ளது.
தமிழகத்தின் நிலைமையை ஆராய்ந்து, கண்காணித்து அரசு திரையரங்கு திறப்பது பற்றி முடிவு செய்யும், அதன் பின்னர் ஐ.பி.எல் ஒளிப்பரப்பு குறித்து பரீசிலனை செய்யப்படும். கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்/ அதிமுக தான் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. அதே போன்று வெற்றியையும் அதிமுக தான் பெறும்” எனக் கூறினார்.