நிச்சயம் செய்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த நபர் கைது!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிராபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு மகன் வடிவேலன். இவருக்கும் மரக்காணம் ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் வடிவேலன் – கலைச்செல்வி இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசியும், தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர். இதில் கலைச்செல்வி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து வடிவேலனிடம் சொல்ல இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணமும் தடைப்பட்டது.
இதுகுறித்து கலைச்செல்வி குடும்பத்தினர் வடிவேலன் குடும்பத்திடம் பேசியும் எந்த பலனும் இல்லை. இதனால் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கலைச்செல்வி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து வடிவேலனை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.