ஒன்றிய அரசு விவகாரம்; இப்படித்தான் பேச வேண்டும் என உத்தரவிட முடியாது – நீதிமன்றம் திட்டவட்டம்!
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கிறது. தமிழகத்தில் இது விவாதப் பொருளாகியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், ஒன்றியம் என்னும் சொல்லில் கூட்டாட்சித்துவம் இருக்கிறது. அதைத் தொடர்ந்து பயன்படுத்தவோம் பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராமசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் அளித்திருந்த மனுவில், மக்கள் மத்தியில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த செயல்பாடு அமைகிறது. ஒன்றிய அரசு என்று அழைப்பது தேசிய ஒருமைப்பாட்டு பிரிவினைவாதம் ஏற்பட காரணமாக அமைந்துவிடும். ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூறினார். அதற்கு பதலளித்த நீதிபதிகள், இப்படித்தான் பேச வேண்டும் என எப்படி உத்தரவிட முடியும் என்று கேள்வி எழுப்பினர். முதல்வரும் அமைச்சர்களும் இப்படித்தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் மனுதாரர் தமிழக மக்களுக்கு எதனை கற்றுக் கொடுக்க முயல்கிறார் என்பது தெரியவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.