காரைக்காலில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வெளியே வரத் தடை! – மாவட்ட ஆட்சியர் உத்தரவு
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொது மக்கள் அவசர தேவையைத் தவிர்த்து வெளியே வர தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டம் நாகை மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கு கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும். பொது மக்கள் அவசர தேவையைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே நடமாடக் கூடாது என்று காரைக்கால் மாவட்ட ஆட்சித் தலைவர் அர்ஜுன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
அவசர தேவையைத் தவிர்த்து வேறு எந்த ஒரு காரணத்துக்காகவும் வெளியே நடமாடினால் அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவ செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகள், பெட்ரோல் நிறுவனங்கள், ஹோட்டல் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் செயல்படும். மதுபானக் கடைகள் இரவு 8 மணிக்கு மூட வேண்டும்.
பாலகங்கள், பால் பூத்கள் இரவு 10 மணி வரை செயல்படும். மொத்தம் மற்றும் சில்லறை மருந்தகங்கள், மருந்து கடைகள் திறக்க எந்த தடையும் இல்லை. மறு உத்தரவு வரும் வரையில் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களுக்கும், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.