ஜன.31ம் தேதி வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் வரும் ஜனவரி 31ம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜன.31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்படும். காணும் பொங்கலன்று மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நேரக் கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழக்கமான நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, ” திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்கும் நபர்களுக்கான உச்சவரம்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உள்ளரங்கு மற்றும் திறந்த வெளிகளில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு உச்ச வரம்பு இன்றி பங்கேற்க இனி அனுமதி அளிக்கப்படுகிறது. புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ – பதிவு முறை அவசியமில்லை. பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயம்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “200 பேர் பங்கேற்கும் வகையில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு கூட்டங்கள் நடத்தவும் விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது. கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்கள், சென்னையில் காவல் ஆணையரிடம் முன் அனுமதி பெறவேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். திரையரங்கில் 100% இருக்கைகளில் அமர்ந்து படம் பார்ப்பது தொடர்பாக எந்த தகவலும் தற்போது வெளியிடப்படாததால், தற்போது இருக்கும் 50% இருக்கைகள் கட்டுப்பாடுகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.