சாட்சி அளித்த பெண் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் விடுப்பு : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சமர்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. தந்தை, மகன் உயிரிழந்த இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் உடனடியாக விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில், 10 குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதனிடையே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்காக சிபிசிஐடி பதிவு செய்தது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்து ராஜ், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக சாட்சி அளித்த பெண் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்க்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஊதியத்துடன் விடுப்பு வழங்க உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.