பறவைக்காய்ச்சலால் கேரள கோழிகள் தமிழகம் வர தடை!
பறவை காய்ச்சலால் கேரளாவில் இருந்து கோழி,வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென செத்து மடிந்தன. இதனால் இறந்த வாத்துகளில் இருந்து எட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித்ததில் “எச் 5 என் 8” வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவைக்காய்ச்சலால் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டாரத்தில் ஒரு கிமீ தொலைவில் உள்ள கோழி மற்றும் வாத்துகள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவின் ஆலப்புழா கோட்டயத்தில் பரவிய பறவை காய்ச்சல் தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி, வாத்துக்களின் முட்டை ,இறைச்சி ,தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கால்நடை துறை இயக்குநர் ஞானசேரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குமரி, தென்காசி ,தேனி ,திருப்பூர், கோவை ,நீலகிரி உள்ள 26 சோதனை சாவடிகள் கண்காணிப்பு தேவை என்றும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு குளோரின் -டை -ஆக்சைடு தெளிக்க வேண்டும் என்றும் ஞானசேரன் உத்தரவிட்டுள்ளார்.