லாரியில் கடத்தப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்; ஒருவர் கைது!
பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொருளான குட்கா மற்றும் பான்மசாலா ஆகியவை வாகனத்தில் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி, சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அச்சமயம் , அவ்வழியே வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்துள்ளனர்.
அந்த லாரியில் குட்கா, ஹான்ஸ் மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், போலீசார் லாரியுடன் சேர்த்து குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், லாரி ஓட்டுனரையும் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்ற நபர் மதுரை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த அழகுராஜா (28) என்பதும், பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் சந்தை மதிப்பு ரூ.30 லட்சமாக இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.