ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்…பள்ளிகளுக்கு அனுமதி!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுளுடனான ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலைமுதலே அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.
புதுச்சேரியை தவிர மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து, திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், சமுதாய மற்றும் அரசியல் கூட்டங்கள் ,பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் ,பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான தடை வரும் 31-ஆம் தேதி வரை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று இறுதி சடங்கில் 20 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.