சிறைக் கைதி செல்வமுருகன் மரணம்: சிபிசிஐடி அதிகாரி மாற்றம்!
விருதாச்சலத்தில் விசாரணைக்கைதி உயிரிழந்த விவகாரத்தில், எதிர்ப்பு கிளம்பியதால் சிபிசிஐடி விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை போலவே, விருதாச்சலத்தில் மேலும் ஒரு காவல் மரணம் அரங்கேறியுள்ளது. விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வியாபாரி செல்வமுருகன், கடந்த 4ம் தேதி உயிரிழந்தார்.
அவரை காவலர்கள் தான் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியதால், அவரது உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், 2 நாட்களில் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் படி, கடலூரை சேர்ந்த சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது.
ஆனால் இதற்கு செல்வமுருகனின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, தற்போது செல்வமுருகன் மரண வழக்கை விசாரிக்க சென்னையை சேர்ந்த டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.