கட்சி அலுவலகத்தை சூறையாடிய பாஜக ஆதரவாளர்கள் – 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 50 நாட்கள் நிறைவடைந்து விட்டன. இன்னமும் அங்கு நிலையான ஆட்சி அமையவில்லை. அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலக்கட்டத்தில் நிலையான அரசு அமைந்தால் தான் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் ஜனநாயகத்தில் பாஜகவும் என்ஆர் காங்கிரஸும் சடுகுடு ஆடிக் கொண்டிருக்கின்றன. இதனால் அங்குள்ள மக்களுக்கு புதிய அரசின் மீது அவநம்பிக்கை ஆரம்பித்துள்ளது. ஆரம்பமே இப்படியென்றால் இன்னும் ஐந்து வருடங்கள் என்னென்ன சோதனைகள் நடக்க போகிறிதோ என அச்சத்தில் உள்ளனர்.
முதல்வர் ரங்கசாமி கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின் ஒரே வாரத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடையும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் வந்தே ஒரு மாதம் ஆகிறது. இப்போது தான் யாருக்கு என்ன பதவி என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. என்ஆர் காங்கிரஸ் 3 அமைச்சர் பதவிகளையும் துணை சபாநாயகர் பதவியையும் பெற்றுக்கொண்டது. பாஜகவிற்கு 2 அமைச்சர் பதவிகள், சபாநாயகர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். இது மட்டுமே பிரச்சினை இல்லாமல் முடிந்தது.
தற்போது 2 அமைச்சர் பதவிகளுக்குப் போட்டோபோட்டி நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக ஒரு அமைச்சர் பதவி நமச்சிவாயத்துக்கு உறுதியாகிவிட்டது. இன்னொரு அமைச்சர் பதவிக்கு தான் வெட்டுக்குத்து வரை போகும் என தெரிகிறது. பாஜக சார்பில் போட்டியிட்ட ஜான் குமாரும் சாய் சரவணக்குமாரும் தங்களுக்குத் தான் அமைச்சர் பதவி வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கின்றனர். ஜான் குமார் ஒரு படி மேலே போய் ஆறு மாதம் மட்டும் பதவி கொடுங்கள்; அதற்குப் பிறகு நானே ராஜினாமா செய்கிறேன் என்கிறார். அவ்வப்போது ஆதாரவாளர்களைத் தூண்டிவிட்டு பாஜகவுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறார்.
நேற்று ஜான்குமாரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு ஜான்குமார் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர். திடீரென அலுவலகம் முன்பிருந்த பெயர்ப் பலகையைக் கிழித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இச்சூழலில் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறுதல், தொற்றுநோயைப் பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.