அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக பெற்ற சலுகைகளைத் திரும்பித் தரத் தயாரா? – எஸ்.வி.சேகருக்கு ஜெயக்குமார் சூடான கேள்வி
அண்ணா பற்றி விமர்சனம் செய்த எஸ்.வி.சேகர் அந்த அண்ணா தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த போது பெற்ற, எம்.எல்.ஏ-வாக இருந்ததால் பெற்று வரும் சலுகைகளைத் திருப்பி அளிக்கத் தயாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க உருப்பட அந்த கட்சியின் பெயர், கொடியில் உள்ள அண்ணாவை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்களை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள். அட்லீஸ்ட் நீங்க திரும்ப ஆட்சிக்கு வர ஒரு வாய்ப்பு கிடைக்கும்” என்று எஸ்.வி.சேகர் கூறியிருந்தது அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நான் ஒரு முறை கூட ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை.சசிகலாவை சந்தித்தஇல்லை. நான் விசுவாசியல்ல. நேர்மையானவன். 2 ஜோடி கால்களைத்தவிர முகத்தையே நிமிர்ந்து பார்க்காதவர்களுக்கு நான் என் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். MGR JJ படத்தை அதிமுக கொடியில் போட முடியாது என சொல்வீர்களா. 1/2 https://t.co/AdGryE7tVp
— S.VE.SHEKHER???????? (@SVESHEKHER) August 5, 2020
இது குறித்து இன்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ரோஷம் மானம் உள்ளவராக இருந்தால் 5 ஆண்டுகள் அதிமுக எம்.எல்.ஏ.,வாக பணியாற்றிய போது வாங்கிய ஊதியத்தையும், தற்போது வாங்கும் ஓய்வூதியத்தையும் எஸ்.வி.சேகர் திருப்பி அளிக்க தயாரா?
விளம்பரத்துக்காக பேசும் பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாது” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவராக எஸ்.வி.சேகர் ஆசைபட்டார். ஆனால், எல்.முருகன் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பிறகு கட்சிப் பற்றி, கூட்டணிக் கட்சிகளைப் பற்றி எஸ்.வி.சேகர் எல்லை மீறி விமர்சிப்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி நிலைக்க எஸ்.வி.சேகர் உள்ளிட்டவர்களின் வாயை தமிழக பா.ஜ.க கட்டிப்போட வேண்டும் என்று பா.ஜ.க தொண்டர்கள் கூறுகின்றனர்.