கல்லூரி தேர்வு விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்- ராமதாஸ்
கல்லூரி தேர்வு விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இறுதித்தேர்வை ரத்து செய்யும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருப்பது கூட்டாட்சி தத்துவம் மீதான தாக்குதல். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதிப்பருவ தேர்வுகளை ரத்துசெய்து விட்டு, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது மாநில அரசுகளின் ஆசை அல்ல. மாறாக, சூழல்தான் இத்தகைய முடிவெடுக்க காரணமாக உள்ளது.
இதை உணர்ந்து கொண்டு, இறுதிப்பருவ தேர்வுகள் விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.