சென்னை சிக்னலில் இன்று நான் கண்ட கண்றாவிக் காட்சி- ராமதாஸ்

 

சென்னை சிக்னலில் இன்று நான் கண்ட கண்றாவிக் காட்சி- ராமதாஸ்

இளைஞர்கள் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமஸ்தாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை சிக்னலில் இன்று நான் கண்ட கண்றாவிக் காட்சி- ராமதாஸ்

இதுகுறித்து தெரிவித்துள்ள ராமதாஸ், “சென்னை மாநகரச் சாலைகளில் இன்று நான் பயணித்துக் கொண்டிருந்தேன். ஒரு போக்குவரத்து சந்திப்பில் சிக்னலுக்காக காத்திருந்த போது நான் கண்ட காட்சி கோபத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியது.
போக்குவரத்து சிக்னலுக்கு அருகில் இருந்த ஒரு தேநீர்க் கடையில் நான்கு இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தினார்கள். பின்னர் அங்கேயே சிகரெட் வாங்கி பற்றவைத்து, எந்த சமூகப் பொறுப்பும் இல்லாமல் புகையை விட்டுக் கொண்டிருந்தனர். இது தான் என்னைக் கோபப்படுத்திய கண்றாவிக் காட்சி.

பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் புகைத்து வெளியிடும் நச்சுப் புகையை சுவாசிக்கும் பெண்களும், குழந்தைகளும் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர்; உயிரிழக்கின்றனர் என்பதால் அதை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது பல தடைகளைத் தகர்த்து அந்த சட்டத்தைக் கொண்டு வந்தார்.

ஆனால், சட்டமும் அதன் கடமையைச் செய்யவில்லை; அந்த சட்டத்தை செயல்படுத்த வேண்டிய காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் கடமையை செய்யவில்லை. சிகரெட் விற்கப்படும் கடைகளில் பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது என்ற வாசகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர்களும் அதை செய்யவில்லை. இவை அனைத்துக்கும் மேலாக பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது என்ற விதியை மதித்து புகைப்பிடிப்பதை அந்த இளைஞர்கள் தவிர்த்திருக்க வேண்டும். அவர்களுக்கும் பொறுப்பில்லை. இனியாவது அனைத்துத் தரப்பினரும் தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். பொது இடங்களில் புகை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.