ரிஹானா, கிரெட்டா பற்றி எனக்கு தெரியாது.. ஆனால் அவங்க ஆதரவை வரவேற்கிறேன்.. ராகேஷ் டிக்கைட்
ரிஹானா மற்றும் கிரெட்டா பற்றி எனக்கு தெரியாது ஆனால் எங்களின் போராட்டத்துக்கு அவர்கள் ஆதரவு அளிப்பதை வரவேற்கிறேன் என்று பாரதி கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக அங்கு விவசாயிகள் போராடி வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர் ஆனால் அந்த சட்டங்களில் திருத்தங்கள் செய்ய தயார், சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. இதனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வராமல் உள்ளது.
இந்த சூழ்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு சர்வதேச பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சர்வதேச பாப் பாடகி ரிஹானா, காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்டோர் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தங்களது குரலை கொடுத்துள்ளனர். இதற்கு மத்திய அரசும், பா.ஜ.க.வினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதை பாரதி கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த வெளிநாட்டு கலைஞர்கள் யார். சில வெளிநாட்டினர் இயக்கத்துக்கு (விவசாயிகளின் போராட்டம்) ஆதரவளித்தால் எந்த பிரச்சினையும் இருக்கக்கூடாது. அவர்கள் எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை அல்லது எதையும் பறிக்கவில்லை. விவசாயிகளின் எதிர்ப்பு கருத்தியல் புரட்சி இது தொலைபேசி-வாட்ஸ் அப்பில் இயங்காது என்று தெரிவித்தார்.