ரஜினி அரசியலுக்கு வருவார்.. சகோதரர் பரபரப்புத் தகவல்
தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வர மட்டாரா…? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக மக்கள் தலையை பிய்த்துக் கொண்டிருக்கும் விஷயம் இது. கிட்டத்தட்ட அவர் அரசியலுக்கு வரப் போவதில்லை என முடிவாகி 15 நாட்கள் ஆகி விட்டது. இதற்கான காரணமாக அவரது உடல் நிலை பற்றியும் அவர் மனம் திறந்து வெளிப்படுத்தி விட்டார்.இந்த நிலையில் அவரது சகோதரரான சத்யநாரயண ராவ் கெய்க்வாட் “ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார்” என மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
தர்மபுரியை ஒட்டியுள்ள அதியமான்கோட்டையில் இருக்கும் ‘’கால பைரவர்’ கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலுக்கு கர்நாடகாவைச் சேர்ந்த மக்கள் அதிகம் வருவது வழக்கம்.நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ்வும் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்வார்.கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தக் கோவிலுக்கு வந்த சத்ய நாராயண ராவ்விடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்ட போது “ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். இது பற்றி வரும் 2020-ம் ஆண்டு அவர் அறிவிப்பு செய்வார்” என்று கூறினார்.
இந்த நிலையில் நேற்று தர்மபுரி, அதியமான் கோட்டையில் உள்ள கால பைரவர் கோவிலுக்கு சத்ய நாராயண ராவ் மீண்டும் வந்தார். அங்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் விளக்குகள் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சத்யநாராயணராவ் கலந்து கொண்டு நடைபாதையில் உள்ள புதிய மின்விளக்குகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது சத்யநாராயணராவ் கூறும் போது: கொரோனா வைரசின் கோரப் பிடியிலிருந்து இருந்து உலக மக்கள் மீண்டு வர வேண்டி, காலபைரவர் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்தேன். ரஜினிகாந்த் நீண்டகாலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார். அவர் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவர். 2020 டிசம்பர் மாதம் இறுதிக்குள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் நல்ல முடிவு விரைவில். ரஜினியின் உடல்நிலை குறித்து அடிக்கடி தொலைபேசி மூலம் விசாரித்து வருகிறேன். கமல் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்ட துணை செயலாளர் காந்தி தலைமை தாங்கினார்.கோவில் செயல் அலுவலர் சண்முகம், அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.