கதிர் அறுக்கும் இயந்திரம் – ஆம்னி பேருந்து மோதல்; 2 பேர் பலி, 25 பேர் படுகாயம்!
புதுக்கோட்டை
புதுகோட்டை அருகே அதிகாலை கதிர் அறுக்கும் இயந்திரம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து நேற்றிரவு ராமேஸ்வரத்துக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை சிவகங்கையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் ஓட்டிச்சென்றார். இன்று அதிகாலை 4 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த பொம்மாடிமலை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த கதிர் அறுக்கும் இயந்திர வாகனம் மீது பேருந்து உரசியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த சரண்யா (26) மற்றும் வெங்கடேஷ் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிந்து, கதிர் அறுக்கும் வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.