விவசாயிகள் ரயில் மறியல் செய்யமாட்டாங்க.. மீண்டும் ரயில்களை விடுங்க.. பஞ்சாப் முதல்வர் கோரிக்கை

 

விவசாயிகள் ரயில் மறியல் செய்யமாட்டாங்க.. மீண்டும் ரயில்களை விடுங்க..  பஞ்சாப் முதல்வர் கோரிக்கை

பஞ்சாபில் விவசாயிகள் 15 தினங்களுக்கு ரயில் மறியலில் ஈடுபடமாட்டார்கள். ஆகையால் அனைத்து ரயில் சேவைகளையும் மீண்டும் தொடங்குங்க என்று மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப் மாநிலம் முழுவதும் அம்மாநில விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரயில்வே அந்த மாநிலங்களுக்கான ரயில் போக்குவரத்தை (பயணிகள் மற்றும் சரக்கு) ரத்து செய்தது. ரயில் சேவை ரத்து காரணமாக ரயில்வேக்கு சுமார் ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதேசமயம் ரயில் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அம்மாநிலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சரக்குகள் தேங்கின. இதனால் வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாநில அரசுக்கும் வருவாய் கடுமையாக பாதித்தது.

விவசாயிகள் ரயில் மறியல் செய்யமாட்டாங்க.. மீண்டும் ரயில்களை விடுங்க..  பஞ்சாப் முதல்வர் கோரிக்கை
முதல்வர் அமரீந்தர் சிங்

இதனையடுத்து அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் மீண்டும் ரயில் சேவைகளை தொடங்கும்படி ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால், சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரித்துள்ளோம். அதனால் ரயில் முன்பு யார் வந்தாலும் பைலட்டால் ரயிலை நிறுத்துவது மிகவும் கடினம். பாதைகளில் போராட்டக்காரர்கள் அகற்றப்படுவார்கள் மற்றும் அதை சுற்றி எந்த பிரச்சினையும் இருக்காது என்று உறுதியளித்தால்தான் ரயில்வே ரயில்களை இயக்க முடியும் என்று பஞ்சாப் அரசுக்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

விவசாயிகள் ரயில் மறியல் செய்யமாட்டாங்க.. மீண்டும் ரயில்களை விடுங்க..  பஞ்சாப் முதல்வர் கோரிக்கை
விவசாயிகள் ரயில் மறியல்

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பஞ்சாப் முதல்வர் நேற்று விவசாயிகளின் அமைப்புகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் விவசாய அமைப்புகள் 15 தினங்களுக்கு ரயில் மறியல் போராட்டத்தை கைவிட முதல்வரிடம் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் டிவிட்டரில், நவம்பர் 23ம் தேதி தொடங்கி 15 நாட்களுக்கு ரயில் முற்றுகைகளை விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். ஏனெனில் இது நமது பொருளாதாரத்தின் இயல்பு நிலையை மீட்டெடுக்கும். பஞ்சாபிற்கு உடனடியாக ரயில் சேவையை தொடங்க மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன் என பதிவு செய்து இருந்தார்