கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலை தூக்கி வீசிய புதுச்சேரி சுகாதார ஊழியர்கள்

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலை தூக்கி வீசிய புதுச்சேரி சுகாதார ஊழியர்கள்

புதுச்சேரி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலை புதுச்சேரி சுகாதார ஊழியர்கள் தூக்கி வீசி சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மருத்துவமனையில் ஜோதிமணி (வயது 44) என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது உடலை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜோதிமணியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து, புதுச்சேரி மருத்துவமனையை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்களே ஜோதிமணியின் உடலை புதைத்தனர். அப்போது அவரது உடலை குழிக்குள் ஊழியர்கள் வீசினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவரின் உடலுக்கு மரியாதை தராமல் இவ்வாறு குழிக்குள் வீசுவது சற்றும் மனிதத் தன்மையற்ற செயல் என நெட்டிசன்கள் சுகாதார ஊழியர்களின் செயலை விமர்சித்துள்ளனர்.