‘விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கியது திமுக’ : மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்!
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கட்சியினர், மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ போராட்டத்தை பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த வாரம் வியாழக்கிழமையில் இருந்து நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது போராட்டத்தை நடத்தும் விவசாயிகள், மத்திய அரசின் பேச்சுவார்த்தைக்கு இணங்கவில்லை. இரண்டு முறை விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு எட்டவில்லை. அதனால், டெல்லி விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கிறது.
இந்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவினர் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் தயாநிதிமாறன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ‘விவசாயத்தை காப்பாற்று’, ‘விவசாயத்தை அழிக்காதே’ என்றெல்லாம் முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. சேலத்தில் ஸ்டாலின் போராட்டத்தில் பங்கேற்க செல்லும் திமுகவினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.