தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது! – மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் திடீர் உத்தரவு
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் கட்டாய கட்டண வசூல் நடந்து முடியும் நிலையில் உள்ளது. கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோர் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
கட்டணம் செலுத்த முடியாத பிள்ளைகளை பள்ளியில் இருந்து நீக்கும் பணிகள் நடந்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள், வேலை வாய்ப்பு முடங்கியுள்ள நிலையில் கட்டணத்தை கட்டியே ஆக வேண்டும் என்று பள்ளிகள் உறுதியாக இருந்தன. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கட்டணம் வசூலிப்பதாக தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்த பள்ளியிலும் ஆசிரியர்களுக்கு முழு சம்பளத்தை ஒழுங்காக கொடுத்ததாக தரவுகள் இல்லை.
இந்த நிலையில் கட்டணம் வசூல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க கட்டணம் வசூலிக்கலாம் என்ற கருத்தும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் பள்ளிகளுக்கு உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “பள்ளி கட்டணம் தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தன்னுடைய முடிவை தெரிவிக்கும் வரையில் தனியார் பள்ளிகள் காத்திருக்க வேண்டும். நாளை வரை எந்தவிதமான கட்டணத்தையும் பள்ளிகள் வசூலிக்கக் கூடாது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.